இங்கிலாந்து அணிக்கு எதிரான 2வது ஒரு நாள் போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் ஒரு நாள் தொடரையும் இழந்தது இலங்கை அணி.
இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுலா சென்றுள்ள இலங்கை அணி ரீ-20 தொடரை 3:0 என்ற அடிப்படையில் இழந்திருந்த நிலையில் தற்போது ஒருநாள் தொடரில் விளையாடி வருகிறது.
முதலாது போட்டியில் தோல்வியடைந்திருந்த நிலையில் நேற்றைய தினம் 2வது போட்டியில் விளையாடியிருந்தது.
நாணயச் சுழற்சியில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி இலங்கை அணியை துடுப்பெடுத்தாட அழைத்தது.
இதையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட் இழப்பிற்கு 241 ஓட்டங்களை பெற்றிருந்தது.
அதிகபட்சமாக தனஞ்செய டீ சில்வா 91, சசுன் ஷானக 47 ஓட்டங்களை பெற்றிருந்தனர்.
பந்து வீச்சில் சாம் கரன்-5, டேவிட் வில்லி-4 விக்கெட்டை கைப்பற்றியிருந்தனர்.
242 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இங்கிலாந்து அணி 43 ஓவர்கள் நிறைவில் 2 விக்கெட்டை மட்டும் இழந்து 244 ஓட்டங்களை பெற்று 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றிருந்தது.
அதிகபட்சமாக இயன் மோர்கன்-75, ஜோ ரூட்-68 ஒட்டங்களை ஆட்டமிழக்காது பெற்றிருந்தனர்.
இதன் மூலம் 3 போட்டிகள் கொண்ட தொடரில் 2 போட்டிகளிலும் வெற்றி பெற்றதன் மூலம் இங்கிலாந்து அணி தொடரில் 2:0 என்ற கணக்கில் முன்னிலை பெற்றுள்ளதுடன் தொடரையும் கைப்பற்றியுள்ளது.
இப் போட்டியில் தோல்வியடைந்ததன் மூலம் இலங்கை அணி மிக மோசமானக சாதனைக்கு சொந்தமாகியுள்ளது.
அதனடிப்படையில் சர்வதேச ஒரு நாள் போட்டிகளில் அதிகளவான தோல்விகளை சந்தித்த அணியாக இலங்கை அணி பதிவாகியுள்ளது.
860 ஒருநாள் போட்டிகளை விளையாடியுள்ள இலங்கை அணி அதில் 428 தோல்விகளை சந்தித்துள்ளது.
இதற்கு முன்னர் 993 போட்டிகளை இந்தியா அணி 427 தோல்விகளை சந்தித்து முன்னிலையில் இருந்தமை குறிப்பிடத்தக்கது.
Category: விளையாட்டு, புதிது
Tags: இங்கிலாந்து, இந்தியா, இலங்கை